பெரம்பலூர்,டிச.20: பெரம்பலூர் பெருமாள் கோயிலில் பகல் பத்து 7ம் நாளில் பெருமாள் நீல் கொண்டை அலங்காரத்தில் செவ்வாழை மாலை அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பெரம்பலூர் நகரில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு கடந்த 13ம்தேதி முதல் 6 நாட்களாக பெருமாள் விமானக் கொண்டை, உருட்டு கொண்டை, ரத்தின கொண்டை போன்ற பல விதமான அலங்காரங்களில் அருள் பாலித்தார்.
திருவிழாவின் பகல்பத்து நிகழ்ச்சிகளில் 7ம்நாளான நேற்று மாலை 5:30 மணியளவில் பெருமாள் நீல்கொண்டை அலங்காரத்தில் செவ்வாழைக்கனி மாலை அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோயிந்தா முழக்கத்துடன் உட்பிரகாரத்தை வலம் வந்தனர். விழாவில் திருக்கோயில் பணியாளர்கள், சீர்பாத பணியாளர்கள், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், கீத்துக்கடை குமார் மற்றும் பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம், எளம்பலூர், விளாமுத்தூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் அருளை பெற்றனர்.