சென்னை: தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை ஆணையர் சமயமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: வேளாண்மையில் புதிய உள்ளூர் தொழில்நுட்பம், புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை 2021-22ம் ஆண்டிலிருந்து இனி ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசு ஊக்குவித்து பரிசளிக்கும். இதன் தொடர்ச்சியாக, 2021-22ம் ஆண்டில் உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து ₹2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது. அதே போன்று, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளையும் ஊக்குவித்து தலா ₹2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி, கைபேசியில் உழவன் செயலி மூலமாகத் தனது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம். இதற்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவுக்கட்டணமாக ₹100 செலுத்த வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்ப படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ஒரு லட்சம் வீதம் பரிசு வழங்கப்படும்.இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே ₹60 ஆயிரம், ₹40 ஆயிரம் வழங்கப்படும். அதேபோன்று, வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிக்கு பரிசாக ₹2 லட்சமும் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பத்திற்கான கால அவகாசம், மார்ச் 18ம் தேதியுடன் முடிகிறது.எனவே, விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், துணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர் ஆகியோர்களைத் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்கிறோம்….