Tuesday, May 21, 2024
Home » வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறில் ரூ174.48 கோடியில் வெள்ள தடுப்பு பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு; அக்டோபருக்குள் பணிகளை முடிக்க உத்தரவு

வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறில் ரூ174.48 கோடியில் வெள்ள தடுப்பு பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு; அக்டோபருக்குள் பணிகளை முடிக்க உத்தரவு

by kannappan

சென்னை: செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் ரூ.174.48 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளும் விரைவாக நடைபெற்றன. வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நீர்வளத்துறை சார்பில் நேற்று செம்மஞ்சேரி டிஎல்எப் அருகில், ரூ21.70 கோடி மதிப்பீட்டில் மதுரபாக்கம் ஓடையில் ஒரு கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி அமைத்து டிஎல்எப் குடியிருப்பு பகுதிக்கு இடையில் செல்லும் சாலை வழியாக 500 மீட்டர் நீளத்திற்கு மூன்று கண் உடைய பெரு மூடுவடிகால்வாய் அமைக்கும் பணிகளையும்; நூக்கம்பாளையம் பாலம் அருகில், அரசன்கழனி கால்வாயிலிருந்து பொலினினி குடியிருப்பு பகுதி மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு கட்டடம் மற்றும் செம்மஞ்சேரி கால்வாயின் இருபுறமும் நூக்கம்பாளையம் பாலம் வரை ரூ.24.30 கோடி மதிப்பீட்டில் 1900 மீட்டர் தாங்குசுவர் அமைத்தல் மற்றும் தூர்வாரும் பணிகளையும்; நேதாஜி நகர் பிரதான சாலை, பொலினினி குடியிருப்பு அருகில் அரசங்கழனி வேலன் தாங்கல் ஏரியில் கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி அமைத்து அரசன்கழனி ஏரியிலிருந்து கழுவெளி வரை ரூ.29 கோடி மதிப்பீட்டில் ஒரு பெரு மூடு வடிகால்வாய் 970 மீட்டர் நீளத்திற்கு அடித்தள கான்கிரீட்டுடன் கம்பி மற்றும் சுவர் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பள்ளிக்கரணை தாமரைக்குளம் அருகில், பள்ளிக்கரணை ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ள நீரினை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக ரூ.57.70 கோடியில் பள்ளிக்கரணை அணை ஏரியிலிருந்து பள்ளக்கரணை சதுப்பு நிலம் வரையில் மூடிய பெரு வடிகால்வாய் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.பின்னர், நெடுஞ்சாலைத் துறை சார்பில் வேளச்சேரி தாம்பரம் சாலையில், தாமரைக்குளம் முதல் பள்ளிக்கரணை NIOT வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வெள்ள நீர் சென்றடையும் வகையில் 1000 மீட்டர் நீளத்திற்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும்  பணிகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வேளச்சேரி, ஏஜிஎஸ் காலனி 4வது பிரதான சாலையில், ஏஜிஎஸ் காலனி 1 முதல் 4 பிரதான சாலைகள் 6வது குறுக்கு தெரு மற்றும் 7வது குறுக்கு தெரு வரையிலான மொத்த பகுதிகளை இணைத்து ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வடிவமைக்கப்பட்டு 6 தெருக்களில் சுமார் 1620 மீட்டர் நீளத்திற்கு, ரூ.5.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும்; அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில், திருவேங்கடம் தெரு, கோவிந்தராஜபுரம் 1வது, 2வது தெரு, கஸ்தூரிபாய் நகர் 1வது தெரு மற்றும் கஸ்தூரிபாய் நகர் 3வது பிரதான சாலைகளை இணைத்து சிதலமடைந்த பழைய கால்வாய்களை இடித்து புதிய ஒருங்கிணைந்த கால்வாய்கள் வடிவமைக்கப்பட்டு 5 தெருக்களில் சுமார் 1085 மீட்டர் நீளத்திற்கு ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும்; அடையாறு, இந்திரா நகர் 3-வது பிரதான சாலையில், இந்திரா நகர், திருவான்மியூர் கண்ணப்பன் நகர், கணேஷ்நகர், காமராஜ் நகர், இந்திரா நகர் பிரதான சாலைகளை இணைத்து சிதலமடைந்த பழைய கால்வாய்களை இடித்து புதிய ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வடிவமைக்கப்பட்டு, வெள்ள நிவாரண  நிதியின்கீழ் 21 தெருக்களில் சுமார் 4895 மீட்டர் நீளத்திற்கு ரூ.14.38 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.174.48 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் அனைத்தையும் அக்டோபர் மாதத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டும் என்று தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழக அரசு மேற்கொண்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளின் மொத்த மதிப்பு ரூ.174.48 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், எம்பி.தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். இப்பணிகள் அனைத்தையும் அக்டோபர் மாதத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டும் என்று தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்….

You may also like

Leave a Comment

four × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi