திருவெண்ணெய்நல்லூர், அக்.31: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்த தீனதயாளன் மகன் திருவரங்கன் (23). இவர் அரக்கோணத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், விடுமுறையை கழித்துவிட்டு கடந்த 27ம் தேதி மீண்டும் அரக்கோணத்துக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் வேலைக்குச் சென்ற திருவரங்கனுக்கு மறுநாள் போன் செய்தபோது ரிங் ஆனதாகவும், ஆனால் போனை எடுக்கவில்லை எனவும், அதன்பின் போனும் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதாகவும், அரக்கோணத்தில் பணிபுரிந்த துணிக்கடைக்கு போன் செய்து விசாரித்ததில் அவர் அங்கும் பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து அக்கம் பக்கத்திலும், நண்பர்கள், உறவினர்கள் வீட்டிலும் தேடிப்பார்த்தும் திருவரங்கன் கிடைக்காததையடுத்து அவரது தந்தை தீனதயாளன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன திருவரங்கனை தேடி வருகின்றனர்.