வேலூர், மார்ச் 27: வேலூர் மத்திய சிறைக்குள் செல்போன் வீச முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க போலீசார் தீவிரமான சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் சிறைக்கு பின்புறம் உள்ள விவசாய நிலத்தில் பணிகள் மேற்கொள்ள கைதிகள் சென்றனர். அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
அப்போது, நிலத்தில் பிளாஸ்டிக் கவர் ஒன்று இருந்தது. அதை போலீசார் எடுத்த பார்த்தபோது, ஆண்ட்ராய்டு செல்போன் இருப்பது தெரியவந்தது. சிறைக்குள் கைதிகளுக்கு சப்ளை செய்வதற்காக செல்போனை மர்ம நபர்கள் வீசி சென்று இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள், பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.