வேலூர் : வேலூர் அருகே உள்ள பொய்கை மாட்டுச் சந்தையில் ₹90 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது.தமிழகத்தில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் கறவை மாடுகள், காளைகள், எருமைகள், மற்றும் ஆடு, கோழிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பொய்கை மாட்டு சந்தை விற்பனை மந்தமாக இருந்தது. நேற்று வழக்கம் போல் பொய்கை மாட்டுச்சந்தை செயல்பட்டது. வழக்கத்தை விட மாடுகள் குறைவாக இருந்தது. ஆனால் பெரும்பாலான வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை வாங்கி சென்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று(நேற்று) 800க்கும் மேற்பட்ட கால்நடைகள் ₹90 லட்சத்திற்கு விற்பனையானது. இனி வரும் வாரங்களில் பொய்கை மாட்டு சந்தைக்கு கால்நடைகளின் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றனர்….