மணப்பாறை, ஏப்.23: மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் மற்றும் ரத பவனி விழா நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் வேப்பிலை மாரியம்மன் கோயில், சுற்றுவட்டார பகுதியில் அமைந்திருக்கும் கோயில்களில் முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலில் சித்திரை முதல் நாள் குத்துவிளக்கு பூஜையுடன் சித்திரை விழா துவங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு பூச்சொரிதல் மற்றும் ரதபவனி நடைபெற்றது.
அந்தந்த பகுதிகளை சேர்ந்த பெண்கள் கைகளில் பூத்தட்டுகளை ஏந்தி தாரைத்தப்பட்டைகள், செண்டை மேளம் முழங்க நகரின் முக்கிய வீதி வழியாக கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபாடு செய்தனர். பல்வேறு வேடமிட்டு விதவிதமாக மின் அலங்கார ரதத்தில் அம்மன் தேர் பவனி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வீரமணி மற்றும் இந்து அறநிலையத்துறை சார்பில் ஆய்வாளர்அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர். மணப்பாறை டிஎஸ்பி மரியமுத்து தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.