Monday, May 13, 2024
Home » வேன் மீது லாரி பயங்கர மோதல்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 3 பேர் பரிதாப பலி

வேன் மீது லாரி பயங்கர மோதல்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 3 பேர் பரிதாப பலி

by Ranjith

 

வேப்பூர், ஜன, 28: மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியபோது வேன் மீது லாரி மோதிய விபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 3 பேர் பலியாகினர்.  திருச்சியில் நேற்றுமுன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வில்லியநல்லூர் பகுதியில் இருந்து முகாம் செயலாளர் வேல்முருகன் தலைமையில் 29 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் மாநாடு முடிந்து இரவு ஒரு வேனில் புவனகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த என்.நாரையூர் அருகே அதிகாலை 2.50 மணியளவில் வேன் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி, எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன், லாரி நொறுங்கி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த புவனகிரி வில்லியநல்லூரை சேர்ந்த நாகேஸ்வரன் மகன் உத்தரகுமார்(29), அன்பழகன் மகன் அன்புசெல்வன் (23) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விஜயகுமார் மகன் யுவராஜ் (17) என்பவர் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 27 பேர் படுகாயமடைந்தனர்.

இதில் ராமச்சந்திரன், நேதாஜி, சக்திமுருகன், ராமகிருஷ்ணன், சரத்குமார், ரஞ்சை ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். வினோத்(35), பாலமுருகன் (43), நவநீதகிருஷ்ணன்(19), சுஜித் (38), கேமநாதன்(18), தினேஷ் (20), ரவிச்சந்திரன் (37), ஹரிகரன் (18), மதியரசன் (23), அருள்தாஸ்(20), அரவிந்த்(24), கனகராஜ் (25), வேன் டிரைவர் கிரஞ்சீவி(26) உள்பட 20 பேர் திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி மகன் செந்தில்கவாஸ்கர்(37) சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பலியானவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், திட்டக்குடி டிஎஸ்பி மோகன், வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார், தீயணைப்புத்துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

twelve − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi