வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு கிராமம் மூணாங்காடு பகுதியில் நேற்று காலை சீனாவில் தயாரிக்கபட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கியது. இதனை அதிகாரிகள் கைப்பற்றினர். கரை ஒதுங்கிய இந்த படகு ரிப் வகையை சார்ந்த சிறிய ரக படகு. இதில் இருவர் மட்டுமே பயணம் செய்யும் அளவில் சீட் அமைப்பு உள்ளது. இந்த படகு 13 மீட்டர் நீளமும், 3 அடி அகலமும் கொண்டது. துடுப்பு பயன்படுத்தி செலுத்தக்கூடியது. ரப்பர் படகின் அடிப்பகுதி கருப்பு நிறமும், நடுப்பகுதி ஆரஞ்சு கலரிலும், மேல்பகுதி ஊதா கலரிலும் இருந்தது. அதில் கைப்பற்றப்பட்ட வாட்டர் பாட்டில், இலங்கையில் தயார் செய்யப்பட்டது. இதனால் இலங்கையில் இருந்து மர்ம நபர்கள், படகில் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் கரை ஒதுங்கிய படகை தஞ்சை சரக டி.ஜ.ஜி. கயல்விழி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கப்பற்படை அதிகாரிகள், மற்றும் உளவுத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த படகில் இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் வந்திருக்கலாமா என்றும், இலங்கையில் தற்சமயம் புதிய அரசு அமைந்தும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடிப்பதால் முக்கிய கடத்தல் நபர்கள் வந்திருக்கலாமா அல்லது இலங்கையில் உள்ள சீனா நாட்டை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் ஊடுருவி இருக்கலாமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை அருகே மாமல்லபுரத்தில் வருகிற 28ம் தேதி நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி வர உள்ளார். இந்த நிலையில் வேதாரண்யம் கடல் பகுதியில் முதன்முறையாக சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கியிருப்பது உளவுத்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டெல்லியில் இருந்து உளவுத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் 5 சீன உளவாளிகள் கடல் பகுதி மூலம் ஊடுருவ இருப்பதாக எச்சரிக்கையை தொடர்ந்து இந்த சீனா தயாரிப்பு படகு கரை ஒதுங்கி இருப்பது அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….