சிவகங்கை: கீழடியில் தமிழக தொல்லியத்துறை சார்பில் நடந்து வரும் 7ம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய தொல்லியல் துறை குழு நேரில் ஆய்வு செய்தது. கீழடியில் ஒன்றிய தொல்லியல் துறை 3 கட்ட அகழாய்வை மேற்கொண்டு கட்டிடங்கள், வாய்க்கால்கள், தங்க தாயக்கட்டை, செஸ் காயின்கள், பானை ஓடுகள், தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு உள்ளிட்டவைகளை கண்டறிந்தனர். அதன்பின் தமிழக தொல்லியத்துறை இதுவரை 4 கட்ட அகழாய்வுகளை மேற்கொண்டுள்ளது. ஒன்றிய தொல்லியத்துறை கீழடியில் மட்டும் அகழாய்வு மேற்கொண்ட நிலையில், தமிழக தொல்லியத்துறை கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் பணிகளை மேற்கொண்டது. தற்போது 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை அகழாய்வில் கருப்பு, சிவப்பு வண்ண பானைகள், பானை ஓடுகள், இரும்பு ஆயுதம், வரிவடிவ ஓடுகள், பானைகள், தலை அலங்காரத்துடன் கூடிய சுடுமண் பொம்மை, உறை கிணறுகள் கண்டறியப்பட்டன. இதனை ஒன்றிய தொல்லியத்துறை மண்டல இயக்குநர் டாக்டர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களிலும் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் அகழாய்வு பணிகள் குறித்தும் ஒன்றிய தொல்லியல் துறை குழுவினர் கேட்டறிந்தனர். …