அம்பை ஆக.6: அம்பாசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாங்குளி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை வகித்தார். வெள்ளாங்குளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் பேசிய வேளாண்மை அலுவலர் ஷாகித் முகைதீன், அம்பை வட்டாரத்தில் வெள்ளாங்குளி, அயன்திருவாலீஸ்வரம், அடையக்கருங்குளம் ஆகிய 3கிராம பஞ்சாயத்துகள் இந்த ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இந்த 3கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரு குடும்பத்திற்கு 2தென்னங்கன்றுகள் வீதம் அதிக பட்சமாக ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 300குடும்பங்களுக்கு 600தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்படுவதாக’ தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு யூனியன் சேர்மன் பரணி சேகர் தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது வேளாண்மைத் துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் வேளாண்மைத் துறை அலுவலர்களை அணுகி திட்டங்கள் பற்றி அறிந்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் வெள்ளாங்குளி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 22 விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான ஆவணங்களை அளித்தனர். இதில் வெள்ளாங்குளி திமுக நிர்வாகி உரக்கடை கண்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜயலெட்சுமி, குமார், அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் தங்க சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.