வேளச்சேரி: சென்னை வேளச்சேரி, பாரதி நகர், பரணி தெருவை சேர்ந்தவர் தன்ஷிகா(34). ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவந்த இவர், வெளிநாடு சென்று வேலை செய்ய ஆசைப்பட்டார். இதையடுத்து நண்பர் கொடுத்த ஆலோசனையின்படி, கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேட்டில் இயங்கிவரும் (அசிஸ்ட் கேரியர் ஜெனரேட்டிங்க் பிரைவேட் லிமிடெட்) தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்த அலுவலகத்தில் இருந்த கிளீனா கிரியேட்டர்(29), அவரது தாய் அனிதாகிரியேட்டர்(59), ஆகியோர் தன்ஷிகாவிடம், ‘’போர்ச்சுக்கல் நாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருகிறோம். அதற்காக 25 லட்ச ரூபாய் தரவேண்டும்’’ என்று கூறியுள்ளனர். இதை நம்பிய தன்ஷிகா, அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் இதன்பிறகு வேலை வாங்கி கொடுக்காமல் ஒரு வருடத்துக்கு மேலாக அலைக்கழித்து வந்துள்ளனர். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்போவதாக தன்ஷிகா கூறியதால், கொஞ்சம் கொஞ்சமாக 11 லட்சம் வரை திரும்ப கொடுத்துள்ளனர். இதன்பிறகு தங்களது செல்போனை ஆப் செய்ததுடன் தாயும் மகளும் அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தன்ஷிகா கடந்த 22-12-2021 வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதவிர, கடந்தமாதம் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரனிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் தாய், மகள் ஆகியோர் வெளிநாடு தப்பிவிடாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.இந்த நிலையில், அமெரிக்கா செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையத்துக்கு வந்த கிளீனா கிரியேட்டர், அனிதா கிரியேட்டர் ஆகியோரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து வேளச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்து விசாரித்தனர். இதில், தாயும் மகளும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பல கோடி மோசடி செய்திருப்பது தெரிந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….