வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக்கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.
1. வெந்தயம் சிறந்த கிளென்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பாலுடன் பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்துவரலாம்.
2. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்தநீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரு முறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டுக் கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.
3. வெந்தயப்பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் போல் முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சி மிக்கது என்பதால், சுவாசப் பிரச்னைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.
4. வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.
5. வெயிலில் சருமத்தின் நிறம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு ½ கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்நீரை குளிரவைத்து பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம், கை, கால்களில் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
– கவிதா பாலாஜிகணேஷ்.