ஓசூர், மே 12: ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 5 பவுன் நகை மற்றும் ₹20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி கொத்தகொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சரோஜம்மா(55). இவர்,கடந்த 8ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். நேற்று முன்தினம், வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, ₹20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை -பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.