சாயல்குடி: கடலாடி ஒன்றியத்தில் ஏழை மக்களால் வீடு கட்டமுடியாமல் கிடப்பில் கிடக்கின்ற வீடுகளை, கலெக்டர் சந்திரகலா அறிவுறுத்தலின் பேரில் சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கட்டி முடித்து தர ஒப்புதல் வழங்கினர். கடலாடி யூனியன் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல்ஜாமியா தலைமையில் நடந்தது. மேலாளர் பாலதண்டாயும் முன்னிலை வகித்தார். நூறு நாள் வேலை திட்ட துணை பி.டி.ஓ ஆனந்தகுமார் வரவேற்றார். அப்போது வீடுகள் இல்லாத மற்றும் குடிசை வீடுகளில் வசிப்போருக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் திட்டத்தின் கீழ் வீடும், கழிவறையும் கட்டிக்கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் கடலாடி ஒன்றியத்தில் 2016-17 ஆண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பல வீடுகள் கட்டாமலும், கட்டுமானங்கள் கட்டப்பட்டு, பணிகள் முடியாமலும் உள்ளன. இதனை தொடர்ந்து கலெக்டர் சந்திரகலா, கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பிரவின்குமார் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராம பஞ்சாயத்துகளில் கிடப்பில் உள்ள அனைத்து வீடுகளையும், பஞ்சாயத்து தலைவர்கள் முன்னின்று கட்ட முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர்களும் ஒப்புதல் வழங்கி 6 மாத காலத்திற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு ஏழை மக்கள் குடியேற்றம் செய்ய வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தனர். மேலும் தேவையான குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய குடிநீர் இணைப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும், குடிநீர் தேக்க தொட்டிகள், குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அலுவலர் முருகன் நன்றி கூறினார். கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்….