மூணாறு, ஆக. 12: கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணியின் கடந்த 2020 ஜூன் 17ம் தேதி துவங்கியது. அப்போது பாறைகள் வெடி வைத்து உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 ஏக்கர் விவசாய நிலங்கள் நாசமடைந்தன. மேலும் விவசாய நிலத்தின் பெரும்பகுதி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஒப்பந்ததாரர் உறுதியளித்துள்ளார்.
இது சம்பந்தமாக ஒப்பந்ததாரருடன் நடத்திய பேச்சு வார்த்தையில், ஏக்கருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரி தேவிகுளம் வருவாய் கோட்ட அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஐ.என்.டி.யு.சி தேவிகுளம் தொகுதி செயலாளர் டி.குமார் துவக்கி வைத்து பேசினார். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.