திருவாரூர்: திருவாரூரில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 172 மனுக்களை கலெக்டர் சாரு பெற்றுகொண்டார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 172 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனே நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில் டிஆர்ஓ சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.