ஓமலூர்: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், எள் சாகுபடி விவசாயிகள் அதிக பயனடைய விதை ஆய்வு பிரிவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி, பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். விவசாயிகள் சிவப்பு எள் வகையான டிவிஎம்-4 ரகம், வெள்ளை எள் ரகங்களான அஸ்பின் 3, சுபிக்ஷா மற்றும் எஸ்விபிஆர் 1, கருப்பு எள் ரகமான டிவிஎம் 3, பிளாக் கோல்ட், புதிய சிவப்பு எள் ரகமான டிவிஎம் 7 ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனர். தரமான விதைகள் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து விதை குவியல்களில் இருந்தும் விதை ஆய்வாளர்களால் அலுவலக மாதிரிகள் எடுக்கப்பட்டு, தேர்ச்சி பெற்ற விதைகள் மட்டுமே விநியோகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதுவரை 150 மாதிரிகள் எடுக்கப்பட்டு, முளைப்பு திறன் பரிசோதனைக்கும், இனத்தூய்மை பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 94 எண்கள் அலுவலக மாதிரிகள் எடுத்து தரம் உறுதி செய்யப்பட்டது. இவற்றில் தரமற்றதாக அறிவிக்கப்பட்ட 280 கிலோ கொண்ட நான்கு விதை குவியல்கள் விற்பனை தடை செய்யப்பட்டது. தரத்தை உறுதி செய்து அறிக்கை பெறப்பட்டவுடன், விற்பனை செய்வதால் தரமான விதை மூலம் விவசாயிகள் நல்ல மகசூல் பெறக்கூடும் என விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு தரமான எள் விதை கிடைக்க நடவடிக்கை
previous post