விழுப்புரம், மார்ச் 5: விழுப்புரம் நகராட்சி திடலில் அரசியல் கட்சியினரின் நிகழ்ச்சிக்காக இடம் பிடிக்க போட்டா, போட்டி ஏற்பட்டு வருகின்றது. விழுப்புரம் நகரில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டங்களை நடத்த பிரதான இடமாக நகராட்சி திடல் உள்ளது. ஏற்கனவே பழைய பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில், அந்த இடத்துக்கு அனைத்து அரசியல் கட்சிக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளுக்கும் ஒரே இடமாக நகராட்சி திடல் விளங்கி வருகின்றன.
புதிய பேருந்து நிலையம் எதிரே சாலையோரம் உள்ள இந்த இடம் பொதுமக்களின் பார்வைக்கும், அரசியல் கட்சிகளின் பலத்தை காட்டும் வகையில் அமைந்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த நகராட்சி திடலில் நிகழ்ச்சிகளை நடத்த அரசியல் கட்சியினரிடையே போட்டா, போட்டி நிலவி வருகிறது. கட்சி நிகழ்ச்சிகளுக்கு தலைவரிடம் கூட தேதி வாங்கிடலாம். ஆனால் இந்த இடத்தில் குறித்த தேதியில் இடம் கிடைப்பதுதான் குதிரை கொம்பாக இருக்கும். அந்தளவுக்கு படும் பிசியாக உள்ள இந்த மைதானத்தில் அண்மையில் புரட்சி பாரதம் கட்சியினர் மாநாடு, திமுகவின் மக்களவை தேர்தல் பொதுக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அவ்வப்போது அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.