விழுப்புரம், ஜூலை 25: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைவு தீர்வுநாள் கூட்டம் நடைபெற்றது. மனு கொடுப்பதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். இதனிடையே மனு கொடுக்க வருபவர்கள் பாதுகாப்பு கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நுழைவு வாயிலில் மனு கொடுக்க வந்த 3 பேரை சோதனையிட்ட போது அவர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் தற்கொலை முயற்சிக்கு வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில், மேல்மலையனூர் அருகே பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(27), சகோதரர் சதீஷ்(28), தாய் வெள்ளக்காரச்சி(48) என்பது தெரிய வந்தது. மேலும் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் குறித்து அவர்கள் கூறுகையில், மேல்மலையனூர் பகுதியில் நாங்கள் ஓட்டல் வைத்துள்ளோம்.
இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் போதையில் வந்த 3 பேர், பரோட்டா கேட்டு தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த 3 பேரும், எங்களை திட்டி ஓட்டலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினார்கள். இதுகுறித்து வளத்தி போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. 3 பேரும், எங்களிடம் வழக்கை வாபஸ் பெறக்கோரி மிரட்டி வருகின்றனர். இதனால் ஓட்டல் வியாபாரம் பாதித்துள்ளதாகவும், மனவிரக்தியில் தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணை நடத்தி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.