கோவை, பிப். 28: கோவை மாவட்ட வாள் வீச்சு சங்க பொதுச்செயலாளர் தியாகு நாகராஜ், பொருளாளர் சிவமுருகன், துணை செயலாளர் அரவிந்த் ஆகியோர் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு வாள்வீச்சு போட்டியில் கலந்துகொண்ட கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஜெப்ரிலின், வாள் வீச்சு போட்டியில் தமிழத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார். அதே நேரத்தில், தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்திற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பியுள்ளார்.
இது, தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறையை களங்கப்படுத்தும் செயல் ஆகும். அவரது மாவட்டத்தில், அவருக்கும், பயிற்சியாளருக்கும் உள்ள சொந்த பிரச்னையை, தமிழக வாள் வீச்சு சங்கத்துடன் தொடர்புபடுத்தி பேசக்கூடாது, அவதூறு பரப்பக்கூடாது. இது தவறு. இது தமிழகத்தில் வாள் வீச்சு விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகளின் செயல்திறனை பாதிக்கும். தவறான தகவல் பரப்புவோர் மீது தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.