போச்சம்பள்ளி : தக்காளி விலை உயர்ந்து வருவதால், தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் மீண்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். கடந்த சில நாட்களாகவே தக்காளி விளைச்சல் அதிகரித்ததால் விலையில் சரிவு ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் தக்காளிகளை சாலையோரம் கொட்டி வந்தனர். மேலும், தோட்டத்தில் இருந்த தக்காளிகளை பறிக்காமல் அப்படியே விட்டதால் செடியிலேயே அழுகி நாசமானது. சிலர் தக்காளி தோட்டத்தையே டிராக்டர் மூலம் அழித்தனர். இந்நிலையில், தற்போது தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக கிலோ ₹2க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது ₹15க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி தோட்டங்களை விவசாயிகள் அழித்ததால் தற்போது உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தக்காளி கிலோ ₹15க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மீண்டும் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், நாற்று உற்பத்தி செய்யப்படும் நர்சரிகளில் தக்காளி நாற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்றனர்.ராயக்கோட்டை, ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நாற்றுக்களை வாங்கி பயிரிட முனைப்பு காட்டி வருகின்றனர். …