Sunday, June 16, 2024
Home » விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்

விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்

by kannappan

தூத்துக்குடி: கடந்த 1992ம் ஆண்டு ரூ.1500 கோடி மதிப்பீட்டில் காப்பர் உற்பத்திக்காக வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் தொடங்கிய ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்திற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். ஆரம்பத்தில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து அலுவலகம் செயல்பட்டது. அதன்பின்னர் சிப்காட் வளாகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் கட்டப்பட்டு, 1996ம் ஆண்டு முதல் காப்பர் உற்பத்தி தொடங்கப்பட்டது.ஆலை தொடங்கப்படுவதற்கு முன்னரே, இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறி மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து விரட்டப்பட்ட இந்த ஆலை தமிழ்நாட்டிலிருந்தும் விரட்டப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகுண்டத்திலிருந்து தூத்துக்குடிக்கு நடைபயணம் மேற்கொண்டார். திமுக உள்ளிட்ட பல்ேவறு அமைப்பினர் இந்த ஆலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் 2018ம் ஆண்டு மே 22ம் தேதி ஆலை விரிவாக்கத்துக்கு தடை கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்த பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு அதே ஆண்டு மே 28ம் தேதி ஆலையை மூட உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி அந்நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு ஆலையை மூட விதித்த தடை தொடரும் என்றும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர், ‘‘ஸ்மெல்டர் காம்ப்ளெக்ஸ் (முதன்மை மற்றும் இரண்டாம் நிலை), சல்பரிக் ஆசிட் தொழிற்சாலை, காப்பர் ரீபைனரி, தொடர்ச்சியான காப்பர் ராட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட், எப்ளூயன்ட் டிரீட்மென்ட் பிளான்ட், கேப்டிவ் பவர் பிளான்ட், ஆர்ஓ யூனிட்கள், ஆக்சிஜன் ஜெனரேசன் யூனிட், குடியிருப்பு வளாகம் ஆகியவற்றை விற்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆலையை வாங்க திறன் படைத்த தரப்பினர் வருகிற ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி தெரிவித்துள்ளது.அதானி வாங்க திட்டமா?: ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனம், அதானி குழும நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன. அவ்வாறு அதானி குழுமம் வாங்கினால், இதேபோல் சுற்றுச்சூழலை பாதிக்கும் காப்பர் தான் உற்பத்தி செய்யப்படுமா? அல்லது வேறு பொருள்கள் உற்பத்தி செய்வார்களா? என்பது குறித்து தொழிலதிபர்கள் மத்தியில் பெரிய விவாதமே எழுந்துள்ளது….

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi