ஈரோடு,ஜூன்9: பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதால் ஈரோடு மாநகராட்சி சார்பில் காவிரிக் கரையோரத்தில் அடர்வனம் அமைப்பதற்காக மரக்கன்றுகள் நடுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி சார்பில் வைராபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் காவிரி ஆறு மாசு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து குப்பைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன.
மக்காத குப்பைகள் மட்டும் 1.25 லட்சம் கன மீட்டர் அளவுக்கு தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து குப்பைகள் அகற்றப்பட்டதையடுத்து அங்குள்ள 3.41 ஏக்கர் நிலத்தில் அடர்வனம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மரக்கன்றுகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் அப்போது வறட்சி நிலவியதால் மரக்கன்றுகள் நடுவதில் சிக்கல் நிலவி வந்தது. நடப்பட்ட மரக்கன்றுகளும் வறட்சியில் கருவிட்டது.
இந்நிலையில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் இந்த சூழலில் மரக்கன்றுகள் நடும் பொழுது எளிதில் வளர்ந்துவிடும் என்பதால் மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகள் தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. குழிகள் தோண்டப்பட்ட இடங்களில் மரக்கன்றுகளும் நடப்பட்டு வருகின்றது. அடர்வனத்தில் பல்வேறு வகையான சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.