விருதுநகர், மார்ச் 11: சிவகாசி அருகே பட்டாசு ஆலை கழிவிலிருந்து பரவிய தீயால் டூவீலர் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி சத்யா நகரை சேர்ந்தவர் வனராஜா(25). வச்சக்காரபட்டி அருகே வெங்கால்நாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பருடன் பட்டாசு ஆலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
பெத்திலுபட்டி தரைப்பாலம் அருகே இயற்கை உபாதைக்காக சாலையோரம் டூவீலரை நிறுத்தினார். அப்போது அருகே கிடந்த பட்டாசு ஆலை கழிவிலிருந்து பரவிய தீ திடீரென டூவீலரில் பிடித்தது. இதில் டூவீலர் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் வனராஜா முதுகு, காலில் காயமடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.