பொன்னேரி: பள்ளி விடுமுறையில் தந்தைக்கு உதவியாக பைக்கில் பால்பாக்கெட் விற்ற மாணவன் லாரி மீது மோதியதில் பரிதாபமாக பலினானான்.மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன். இவரது மகன் சாமுவேல்(18), 11ம் வகுப்பு பயின்று வந்தான். இதற்கிடையில், கோடை விடுமுறை என்பதால் தந்தைக்கு உதவியாக காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அருகே அமைந்திருக்கும் டீக்கடைகளில் பால் பாக்கெட் போடும் பணியினை செய்து வந்தான். இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது காட்டுப்பள்ளி கிராமத்திற்கு மேம்பாலத்தின் மேல் வந்தபோது அவனுக்கு முன் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மோதினான். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்தவௌ்ளத்தில் பரிதாபமாக பலியானான்.தகவலறிந்த காட்டூர் போலீஸ் எஸ்ஐ கோவிந்தராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது….