நாகர்கோவில், ஜூலை 2: விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை ஏற்கப்பட்டு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு ஒரு முக்கியமான ரயிலாக உள்ளது. ஆனால் இந்த ரயில் காலை மிக தாமதமாக நாகர்கோவில், இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களை வந்தடைகிறது. சென்னையில் இருந்து இரவு 8 மணி 10 நிமிடத்திற்கு புறப்பட்டு திருநெல்வேலி, ஆரல்வாய்மொழி போன்ற இடங்களில் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு காலை 8.37 மணிக்கு மேல் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்து கொண்டிருந்தது. இது பயணிகளுக்கு மிகவும் சிரமத்தை கொடுத்து வந்தது.
இந்த ரயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் விஜய் வசந்த் எம்.பியிடம் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று அவர் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பினார். அந்த மனுவில், அனந்தபுரி ரயில் வழியில் மற்ற ரயில்கள் கடந்து செல்வதற்காக நிறுத்தி வைப்பதை சுட்டிக்காட்டி அவற்றை தவிர்க்கும் வண்ணம் ரயில்களின் அட்டவணையை சீர் செய்ய வேண்டுமென கேட்டு கொண்டார். மேலும் அனந்தபுரி ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி இயக்க வலியுறுத்தியும் கடிதம் எழுதி இருந்தார். இதை கருத்தில் கொண்ட ரயில்வே நிர்வாகம் வருகின்ற ஜூலை 7 முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் டவுன் நிலையத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக காலை 8.07 மணிக்கு வந்தடைந்து காலை 8.12 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையில் பயண நேரத்தை மாற்றி அமைத்துள்ளனர். அது போல இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களுக்கு தற்போது உள்ளதை விட 30 நிமிடங்கள் முன்னதாக சென்றடையும். இந்த ரயில் காலை 10.10 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும் என அறிவித்துள்ளது.