சேலம், மார்ச் 16: சேலத்தில் குடியுரிமைச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி விசிக, வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல செயலாளர் இமயவரம்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் காஜாமைதீன், மொழியரசு, கருப்பையா, சுந்தர், தெய்வானை, மெய்யழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் பாவேந்தன், நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதேபோல், ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர் சார்பில் தாதகாப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகர தலைவர் கோபிராஜ், மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ஞானசவுந்தரி, மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் ஒன்றிய அரசை கண்டித்தும், சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.