பூந்தமல்லி: வாலிபரை கடத்தி, மதுரவாயல் பைபாஸ் சாலையில் பணம், செல்போன் பறித்து சரமாரி தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ் (28). கனடா நாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் விடுமுறையில் சென்னைக்கு வந்த விக்னேஷ், நேற்றுமுன்தினம் “டாட்டூ” வரைவதற்காக வடபழனியில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 2 பேர், இதைவிட சிறப்பாக டாட்டூ வரையும் இடம் உள்ளது. அங்கு செல்லலாமா என விக்னேஷிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததால், காரில் அழைத்து சென்றுள்ளனர். கோயம்பேடு அருகே வந்தபோது, வழியில் நண்பர்கள் என கூறி இருவரை காரில் ஏற்றியுள்ளனர். மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார் வந்தபோது, 4 பேரும் விக்னேஷை சரமாரி தாக்கி, அவரிடமிருந்த ரூ.60 ஆயிரம், ஏடிஎம் கார்டு, செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறித்துள்ளனர். பின்னர், போரூர் சுங்கச்சாவடி அருகே விக்னேஷை காரிலிருந்து தள்ளிவிட்டு தப்பினர். காயமடைந்த விக்னேஷ் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மதுரவாயல் போலீசார், விக்னேஷை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வழிப்பறி ஆசாமிகள் யார் என விசாரித்து வருகின்றனர். மதுரவாயல், போரூர், வானகரம், அய்யப்பன்தாங்கல் பகுதிகளில் காரில் கடத்தி சென்று வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….