தேனி, மார்ச் 8: தேனியில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி , வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி, துணை வாக்குச்சாவடி அமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் வாக்குசாவடி மறுசீரமைக்க உள்ள உத்தேச பட்டியல் வழங்கப்பட்டது.
மேலும், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான தங்களது கருத்துகளை வருகிற 11-ம் தேதிக்குள் அந்தந்த கோட்டத்திற்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் எழுத்துபூர்வமாக அளிக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துமாதவன் (பெரியகுளம்), தாட்சாயினி (உத்தமபாளையம்), மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, தேர்தல் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.