திருப்போரூர்: நெம்மேலி சாலையில், மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக வெள்ளநீரால் பாதிக்கப்பட்டு, நீர் முற்றிலும் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதால், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயலின் காரணமாக நிரம்பி வழிந்த தையூர், கொண்டங்கி, தண்டலம், சிறுதாவூர், ஆமூர், மானாம்பதி ஆகிய ஏரிகளின் உபரிநீர் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக பக்கிங்காம் கால்வாயை அடைந்தது. இதன் காரணமாக பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் நெம்மேலி சாலையின் இருபுறமும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
நெம்மேலி சாலையை மூழ்கடித்து வெள்ளம் சென்றதால் திருப்போரூரில் இருந்து நெம்மேலிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது, வெள்ளநீர் வடிந்து சாலை பயன்படுத்தும் நிலைக்கு மாறியதால் திருப்போரூர் போலீசார் சாலைத்தடுப்புகளை அகற்றி வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக அனுமதித்தனர். மேலும், பக்கிங்காம் கால்வாயில் இறங்கி குளிக்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. திருப்போரூர் போலீசார் அப்பகுதியில் ஜீப்பில் சென்று ஜாலிக்காக மீன் பிடிக்க வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.