துவரங்குறிச்சி, மார்ச் 14: வளநாட்டில் பொன்னர் – சங்கர் திருவிழாவை முன்னிட்டு கிளிபிடித்தல் திருவிழா 15ம் தேதி நடைபெறுகிறது.வளநாட்டில் மன்னர்களாக ஆட்சி புரிந்த பொன்னர் – சங்கர் மன்னர்களின் வீர வரலாற்று சிறப்பு மிக்க மாசி பெருந்திருவிழா, மணப்பாறை அருகே கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னிவளநாட்டிலும், அண்ணன்மார்கள் வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலிலும், கடந்த மார்ச் 9ம் தேதி கன்னிமாரம்மன் திருக்கோயில் காப்பு கட்டுதல், கொடியேற்றம் ஆகியவற்றுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், பொன்னர் – சங்கர் மன்னர்களின் குலதெய்வமாக போற்றப்படும் வளநாடு தூண்டி கருப்ப சுவாமி ஆலயத்தில் பரம்பரை அறங்காவலர் ஜோதிமலர், இந்து சமய அறநிலயத்துறை ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் வழிபாடு நேற்று தொடங்கியது. இதனைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) வளநாட்டில் தங்காள் கோயில் திருவிழா, தீர்த்தம் எடுத்தல் நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) தங்கைக்கு கிளி பிடித்தல், இரவு படுகளம், நாளைமறுநாள் (சனிக்கிழமை) வீரப்பூரில் வேடபரி நிகழ்ச்சியும், வருகிற ஞாயிற்றுக்கிழமை பெரிய தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.