மதுரை: மதுரை மாநகரின் மைய பகுதியில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மேலவாசல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் – சுந்தரி தம்பதியினரின் இளையமகள் துர்கா. அப்பகுதியில் ஆரம்பக் கல்வியும், அதனைத்தொடர்ந்து, மாநகராட்சியின் ஈ.வெ.ரா மகளிர் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். மிகவும் துடிப்பான பெண்ணான இவர், வழக்கறிஞராக வேண்டும் என முடிவு செய்து, தந்தை இறந்த நிலையிலும், தாய் கொடுத்த ஊக்கத்தில், நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் 4 ஆண்டுகளும், கடந்தாண்டு திருச்சி சட்டக்கல்லூரியில் 5ம் ஆண்டும் படித்து முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார். இவர் வழக்கறிஞருக்கான சான்றிதழை முறையாக கடந்த வாரம் சென்னை பார் கவுன்சிலில் பதிவு செய்தார்.சென்னையிலிருந்து ரயில் மூலமாக நேற்று மதுரை வந்த வழக்கறிஞர் துர்காவிற்கு மேலவாசல் மக்கள் மேள தாளங்கள் முழங்கவும், சால்வை அணிவித்தும் வரவேற்பு கொடுத்தனர். வழக்கறிஞர் துர்கா கூறும்போது, ‘‘மேலவாசல் பகுதி இளையோர் கல்வி பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வேன். சட்டம் குறித்து பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கவுள்ளேன்’’ என்றார்….