திண்டுக்கல், பிப். 13: திண்டுக்கல் பூசாரிகள் பேரமைப்பு சார்பில் வருவாய் இல்லாத கோயில்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட பூசாரிகள் பேரமைப்பு மாநில இணை செயலாளர் உதயகுமார் சிவாச்சாரியார், மாவட்ட துணை தலைவர் சரவணகுமார், மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட செய்தி தொடர்பு செயலாளர் குமார் ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது: வருவாய் இல்லாத கோயில்களின் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஏற்கனவே ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் மறைவிற்கு பிறகு அவர்கள் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரிய அட்டை பெறுவதில் ஆண்டு வருவாய் ரூ.72,000க்கு கீழ் நிர்ணயிக்க வேண்டும். நலவாரிய செயலி தற்போது செயல்படாமல் உள்ளது,
அதனை செயல்படுத்த வேண்டும். வருவாய் அதிகம் உள்ள கோயிலில் இருந்து வருவாய் இல்லாத கோயிலுக்கு தீப எண்ணெய், அரிசி, பூஜை பொருட்கள் வழங்க வேண்டும். வருவாய் இல்லாத கோயில்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர். இதில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.