ஊட்டி, மார்ச் 6: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகம் நேற்று இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தினேஷ், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரவு வரை இவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.