வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு அருகே 25த்திற்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் கடந்த மூன்று தலைமுறையாக வீட்டு மனைப்பட்டா, நிலங்களுக்கு தேவையான பட்டா வழங்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பலமுறை வருவாய்த்துறை அதிகாரிகள் மலைக்கிராமங்களில் ஆய்வு செய்தும், இதுவரையும் பட்டா வழங்கவில்லை என புலம்பி வருகின்றனர், இது குறித்து கிராமவாசிகள் கூறுகையில், ‘‘மூன்று தலைமுறையாக மஞ்சனூத்து, அரசரடி, இந்திராநகர், கோரையூத்து, கோம்பைத்தொழு, காமன்கல்லூர், திருப்பூர், கன்னியம்மாள்புரம், காமராஜபுரம் தண்டியகுளம், முத்துநகர், காந்திகிராமம், வண்டியூர், வீருசின்னம்மாள்புரம் உரக்குண்டாண்கேணி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவர் பால் கண்ணன் கூறுகையில், ‘‘மலைக்கிராமங்களில் உள்ள அனைத்து பொதுமக்களும் அரசின் எந்த நலத்திட்டங்களும் பெறமுடியாமலும், இலவச வீடுகள் கட்ட முடியாமல் உள்ளனர். மழைகாலங்களில் இப்பகுதிகளில் சூறைக்காற்று அதிகளவில் வீசும். இதனால் இப்பகுதிமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் கூரைகள் மீது கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இந்த நிலையை போக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, கிராமத்திற்குத் தேவையான இலவச வீட்டு மனை பட்டா, நிலப்பட்டா, பசுமை வீடு, தார்ச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’’ என்றார்….