கம்பம்: கம்பம் பகுதியில் உள்ள வயல் வெளிகளில் நெற்பயிரை நாசம் செய்யும் எலிகளை இடிக்கி வைத்து பிடிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் போக சாகுபடி துவங்கியது. தற்போது 60 நாள் பயிர்களாக உள்ள நிலையில், இளம் நெற்பயிர்களை எலிகள் நாசம் செய்து வருவதால், வளர வழியின்றி பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் பெருமளவு மகசூல் பாதிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு அதிகம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனைத்தடுக்கும் பொருட்டு, நெற்பயிர்களை சேதப்படுத்தி வரும் எலிகளை, இடிக்கி வைத்து விவசாயிகள் பிடித்து வருகின்றனர். மூங்கிலால் செய்யப்பட்ட இந்த இடிக்கிகளை பயிர்களுக்கு நடுவே ஊன்றி வைத்து விட்டு, அதனை சுற்றிலும் எலிகளுக்கு பிடித்த உணவாகிய அரிசி, நெல், நிலகடலை பருப்பு, தேங்காய் ஆகியவற்றை கலந்து முதல் நாள் இரவு வைத்து விட்டு செல்கின்றனர். இந்த பொறிகளில் எலிகள் அனைத்தும் சிக்கி கொள்கின்றன. இதனால் பயிர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘தற்போது இளம் நெற்பயிர்களை எலிகள் கடித்து நாசம் செய்கின்றன. இதனை தவிர்க்கும் விதமாக எலி இடுக்கிகளை வாடகைக்கு வாங்கி வயல்களில் வைத்து வருகிறோம். 1 இடுக்கி 60 ரூபாய் வாடகைக்கு கிடைக்கிறது. வயல்வெளிகளில் ஆங்காங்கு வைக்கப்படும் இந்த இடிக்கிகளில் எலிகள் சிக்கிக்கொள்கின்றன. இதனால் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன’’ என்றார்….