திருச்சி, மார்ச்.5: திருச்சி மாநகர அரசு மருத்துவமனை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வயலூர் சாலையில் நவீன போலீஸ் சோதனை சாவடி எண்.8 மாநகர போலீஸ் கமிஷனர் காமினி நேற்று துவக்கி வைத்தார்.
திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வயலூர் சாலையில் போலீஸ் சோதனை சாவடி எண்.8 பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. வயலூர் ரோடு சாலை விரிவாக்கத்திற்கு பின்னர் புதிய போலீஸ் சோதனை சாவடி எண்.8 அமைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய அதிநவீன சோதனை சாவடியை நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் காமினி துவக்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:
இச்சோதனை சாவடியில் வயலூர் ரோடு வழியாக திருச்சி மாநகருக்குள் வந்து செல்லும் வாகனங்களை பதிவு செய்யும் விதமாக 2 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு தகவலையும் உடனடியாக தெரிவிக்க VHF மைக்கும் பொருத்தப்பட்டுள்ளது. சோதனை சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் தணிக்கை செய்யவும், சாலை விபத்துக்களை தடுக்கும் வகையிலும், வாகனங்களின் வேகத்தை தணிக்கும் வகையிலும் ஒளிரும் ஸ்டிக்கர்களுடன் கூடிய இரும்பு தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சோதனை சாவடியில் சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படும். இந்த அதிநவீன சோதனை சாவடி எண்8 செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் வரும் காலங்களில் மாநகருக்குள் வந்து செல்லும் வாகனங்களை தீவிர வாகன தணிக்கை செய்யவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை சோதனை மூலம் பிடிக்கவும், சட்ட விரோத நபர்களை கண்காணிக்கவும். அரசு மருத்துவமனை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட உய்யக்கொண்டான் திருமலை, குமரன் நகர், வாசன் சிட்டி, குழுமிக்கரை ஆகிய இடங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் பேருதவியாக இருக்கும்.
மேலும் மாநகரப்பகுதிகளில் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு திருச்சிக்குள் வந்து செல்லும் வாகனங்களை தணிக்கை செய்வதற்காக மாநகரத்தின் எல்லைகளில் மொத்தம் 9 போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்தார்.