சென்னை : வண்டலூர் உயிரியல் பூங்காவில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 13 வயது பெண் வெள்ளை புலி பரிதாபமாக இறந்தது. சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் கொரோனா பாதிப்பால் சிங்கம், புலி உள்ளிட்ட பல விலங்குகள் அடுத்தடுத்து இறந்தன. இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த 13 வயது ஆகன்ஷா என்ற வெள்ளை பெண் புலி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. நரம்பு பாதிப்பு ஏற்பட்டு 4 கால்களும் முடங்கிப்போன நிலையில் படுத்த படுக்கையாக இருந்த பெண் வெள்ளைப் புலிக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பெண் வெள்ளை புலிக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என பூங்கா நிர்வாகத்தினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த பெண் வெள்ளை புலி பூங்கா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று காலை அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 13 வெள்ளை புலிகள் இருந்தன. தற்போது, பூங்காவில் பிறந்து வளர்ந்த ஆகன்ஷா என்ற பெண் வெள்ளைப்புலி இறந்ததால் 12 புலிகள் மட்டும் உள்ளன….