லால்குடி, ஜூலை 22: லால்குடி அருகே பெருவளப்பூர் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவியை தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டனர். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் வர்ஷா. கோயம்புத்தூரில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்காக தனது சொந்த ஊரான பெருவளப்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது தந்தை,தாயுடன் வயலுக்கு சென்றுள்ளார். அங்கே கிணற்றின் ஓரமாக சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி 50 அடி ஆழ கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றில் அலறல் சத்தம் கேட்டதும் வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தந்தை முருகேசன் ஓடிவந்து கிணற்றில் விழுந்த தனது மகளை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியாத நிலையில் சென்னை நவீன கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் புள்ளம்பாடி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து மகேந்திரன், சிறப்பு நிலைய அலுவலர் பாரதி, திராவிடன், மற்றும் வீரர்கள் ராபர்ட் கென்னடி கனகராஜ் .அருண்ராஜ் . பிரகாஷ் லோகநாதன் ஆகியோர் விரைந்து சென்று கயிறு உதவியுடன் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி தண்ணீரில் போராடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைத்தனர். கிணற்றில் விழுந்த கல்லூரி மாணவியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.