லால்குடி, பிப்.24: லால்குடி நகராட்சியில் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் நகராட்சி அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் லால் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. காலை உணவு திட்டத்தின் கண்காணிப்பு குழு தலைவர் குமார் தலைமை வகித்தார். கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் நகராட்சி மேலாளர் அமுதவள்ளி, பொறியாளர் வெங்கட்ராமன், துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கணக்கர் மல்லிகா மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள், நெஸ்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் மரிய விக்டர், சாய்வித்யாலாயா பள்ளி தாளாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தில் காலையில் உணவு வழங்குவதை தினமும் நேரில் கண்காணித்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும், மேலும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.