சென்னிமலை, ஜூலை 1:சென்னிமலையில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் (23). இவர் சென்னிமலை அறச்சலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது ஒருவர் ரஞ்சித்தை வழிமறித்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தன்னிடம் இருப்பதாகவும், இதனை சுரேஷ் என்பவரிடம் வாங்கி வந்ததாகவும் இதனை வாங்கினால் பரிசு விழும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபரிடம் ரஞ்சித், தன்னுடைய வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்று சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
எஸ்.ஐ. பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த சென்னிமலை களத்துக்காட்டை சேர்ந்த அருணாச்சலம் (52) என்பவரை கைது செய்தனர். அதே போல சென்னிமலை – ஊத்துக்குளி ரோட்டில் எல்லக்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் கடையில் அரசு அனுமதியின்றி மதுபானம் அருந்த அனுமதிப்பதாக சென்னிமலை எஸ்ஐ கிருஷ்ணராஜூக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடை உரிமையாளர் நீலகண்ட மூர்த்தி (42) என்பவரை கைது செய்தார்.