ராமநாதபுரம், பிப்.12: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஆணையாளர் அறிவுரையின்படி பொது விநியோகத்திட்ட பொருட்களை கடத்துதல் மற்றும் பதுக்குதலை தடுக்கும் பொருட்டு, பொது விநியோகத் திட்டம் தொடர்புடைய குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, தொடர்புடைய பொது விநியோகத் திட்ட பொருட்களை கடத்துதல் மற்றும் பதுக்குதல் சட்டப்படி குற்றமாகும். பொது விநியோகத்திட்ட பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 பிரிவு 7(1)(a) (ii)-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 படி 3 முதல் 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் அல்லது அபராதமும் சேர்த்து விதிக்கப்படும். மேலும் அத்தியாவசியப் பொருட்களை கடத்துவதற்கு பயன்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பொது விநியோகத் திட்ட பொருட்களை கடத்துதல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1800 599 5990 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.