திருப்பூர், மே 4: ‘பாலி பேக்’ சங்க உறுப்பினரின் பண பரிவர்த்தனை வழக்கை ஆர்பிட்ரேஷன் கவுன்சில் சுமூகமாக தீர்த்து வைத்துள்ளது. திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கவுன்சில் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி, திருப்பூர் பாலிபேக் சங்க நிர்வாகி ஆனந்தவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ‘பாலிபேக்’ சங்க உறுப்பினர் ஒருவர், வால்பாறையில் உள்ள தேயிலை நிறுவனத்துக்கு 5.90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்கை அனுப்பியிருந்தார். அதற்கு உரிய பணம் கிடைக்காமல் இழுபறி நீடித்தது.
இதுதொடர்பான வழக்கு, ஆர்பிட்ரேஷன் விசாரணைக்கு வந்தது. முறையான ஆவணங்கள் அடிப்படையில் வர்த்தகம் நடந்திருந்ததால், இரு அமர்விலேயே சுமூக தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆர்பிட்ரேஷன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறுகையில், ‘திருப்பூர் பாலிபேக் சங்க உறுப்பினர், வால்பாறை தேயிலை நிறுவனம் இடையே பணி வர்த்தனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு அமர்வில் 5.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான வழக்கில் சுமூக தீர்வு கிடைத்துள்ளது’ என்றார்.