ஊட்டி, நவ. 10: ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு வரும் அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணையை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஊட்டி அருகே அவலாஞ்சி பகுதியில் டிரவுட் மீன் பண்ணை உள்ளது இந்த மீன் பண்ணையில் டவுட் மீன் குஞ்சுகள் பொரிக்கப்பட்டு அவைகளை அவலாஞ்சி எமரால்டு உள்ளிட்ட பல்வேறு அணைகளிலும் மற்றும் நீரோடைகளிலும் விடப்படுகிறது.
அறிய வகை இந்த ட்ரவுட் மீன்கள் அழியாமல் இருக்க மீன்வளத்துறை இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மீன் பண்ணையில் மீன் வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்கீழ் (2022-2023) ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பண்ணையில் 30 மீட்டர் அளவில் இணைப்பு பாலம், சாலை, தடுப்பணை, 9 சினை மீன் தொட்டிகள், டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம், தடுப்புச்சுவர் மற்றும் மின்பணிகள் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது, மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜோதி லக்ஷ்மணன், ஊட்டி மீன்துறை ஆய்வாளர் ஷில்பா, மீன்துறை சார் ஆய்வாளர் ஆனந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.