சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் ஒன்றியம், புதன்சந்தையில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும் சந்தையில், மாடுகளை வாங்கவும், விற்கவும் ஆந்திரா, கர்நாடகம், கேரளா, கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் வருவார்கள். பக்ரீத் பண்டிகை முடிந்ததால், நேற்று முன்தினம் கூடிய சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து குறைந்தளவே விற்பனைக்கு வந்திருந்தன. மாடுகளை வாங்க வெளி மாநில வியாபாரிகளும் குறைந்தளவே வந்திருந்தனர். இதனால் மாடுகளின் விலை சரிந்தது. பருவமழை தொடங்க தாமதமாகி வருவதால், பால் உற்பத்திக்காக விவசாயிகள் கறவை மாடுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், மாடுகள் விலை குறைந்தது. இறைச்சி மாடுகள் ரூ.26 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ரூ.47 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ரூ.16 ஆயிரத்திற்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.