புதுக்கோட்டை, மே 23: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுநாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்தும், உறுதிமொழி எடுத்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவியநாதன், மாநிலப் பொதுச் செயலர் பெனட் அந்தோணிராஜ், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சந்திரசேகரன், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் இப்ராஹிம் பாபு, வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, வட்டார காங்கிரஸ் சார்பில் திருச்சி சாலை பாலன்நகரில் ராஜிவ்காந்தியின் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் பெனட் அந்தோணிராஜ், மாவட்டத் தலைவர் முருகேசன், செம்பாட்டூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செம்பை மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டு அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.