ராஜபாளையம், ஏப். 28: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் சங்கிலி காளை. ஆட்டோ டிரைவரான இவர் சேத்தூருக்கு தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் ஒன்று ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்த நிலையில், ஆம்னி பஸ் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சின் முன் பக்கம் மற்றும் ஆட்டோ சேதமடைந்தது. மேலும் ஆட்டோவை ஓட்டிச் சென்ற சங்கிலி காளைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இவருக்கு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங் கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து
previous post