ராசிபுரம், மே 14: ராசிபுரம் அருகே புறவழிச்சாலை பணிகளை கோட்டப்பொறியாளர் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்குட்பட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையின் கீழ் அணைப்பாளையத்தில் இருந்து பொன்குறிச்சி வரை நடைபெற்று வரும் புறவழிச்சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குணா ஆய்வு செய்தார். அப்போது, சாலை அமைப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்த இடர்பாடுகளை களையவும், பணிகளை விரைந்து முடிக்கவும் ஆலோசனை வழங்கினார். 95 சதவீத சாலை பணி முடிவடைந்த நிலையில், இன்னும் 100 மீ., அளவு மட்டுமே சாலை அமைக்கப்படவுள்ளதால் அந்த பணிகளை
விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும், சாலையோரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை துவக்கி வைத்தார். ஆய்வின்போது ஜெகதீஷ் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருச்செங்கோடு: திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட மல்லியகரை – ராசிபுரம் – திருச்செங்கோடு – ஈரோடு சாலையில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நாமக்கல் கோட்டப் பொறியாளர் குணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியை அவர் துவக்கி வைத்தார். இந்த ஆய்வின் போது உதவிகோட்ட பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர் சையத் ரசீம் ஆகியோர் உடனிருந்தனர்.