சேலம், ஜூன் 18: சேலம் சிவதாபுரம் மலங்காட்டான் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (40), கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவர், நேற்று முன்தினம் மாலை, கொண்டலாம்பட்டி வண்ணாகுளம் பகுதியில் வசிக்கும் தனது தாயார் கோவிந்தம்மாளை பார்க்க வந்துள்ளார். பின்னர், இரவில் அங்கிருந்து ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு, புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது அவர், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவில், பெரிய கொண்டலாம்பட்டி முனியப்பன் கோயில் அருகில் குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது பாலக்காடு-சென்னை ரயில் வந்தது. அந்த ரயில், பெருமாள் மீது மோதிச் சென்றது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு பாலக்காடு-பழனி ரயில் வந்ததும், அதன் லோகோ பைலட் கொண்டலாம்பட்டி பகுதியில் வந்தபோது ரயிலில் ஒருவர் அடிபட்டார் எனத் தெரிவித்தார். சேலம் ரயில்வே போலீஸ் எஸ்ஐ விக்னேஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார், சம்பவ இடம் சென்று தேடி பார்த்தனர். ஆனால், இருட்டில் ரயிலில் அடிப்பட்ட பெருமாளை கண்டறிய முடியவில்லை. தொடர்ந்து நேற்று காலை தேடியநிலையில், தண்டவாளத்தை ஒட்டி பெருமாள் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.